எந்த கோயில்? என்ன பிரசாதம்?

சென்னை, நங்கநல்லூர் - அனுமார் வடை

சென்னை, நங்கநல்லூரில் ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். முப்பத்தியிரண்டு அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார். இவருக்கு சாத்தப்படும் வடை மாலை மிகவும் சிறப்புடையது. இந்த வடை மாலைக்கு ஆறாயிரம் வடைகள் தயார் செய்யப்பட்டு மாலையாக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தொண்ணூற்றிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டது. இத்தலம் 1995ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காஞ்சிப் பெரியவரால் இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டு இப்போது  நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது. ‘‘ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி’’ என்ற பெயருடன் ஆஞ்சநேயர் எழுந்தளியுள்ளார்.

ஸ்ரீ ரமணி அண்ணா என்கிற ஆன்மிகவாதி, கனவு வழியோகவோ அல்லது ஆன்மிக அனுபவம் பெற்றோ, இப்படி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கட்டவேண்டும் என்கிற மாபெரும் திட்டத்தை சங்கல்பித்து நீண்ட காலகட்டத்தில் உருவான அருமையான ஒரு கோயில் இது. மிக உயரமான ஒரு பீடமும், பின் அதில் பொறுத்தப்பட்ட 32 அடி ஆஞ்சநேயர் சிலையும் (ஒற்றைக் கல்) அந்த கோவில் வட்டாரத்துக்கு அருகிலேயே படுக்கை வாட்டில் வைத்துச் சிற்பிகள் செதுக்கினார்கள்.

அந்தப் பாறையை எத்தனையோ சிரமப் பட்டு அந்த இடத்துக்குக் கொண்டு வந்தார்கள். கண் முன்னே படிப்படியாக மாதக்கணக்கில் சிற்பிகள் நுணுக்கமாக செதுக்கினர். பின் சாம்பல் நிறத்திலாலான அந்த விக்ரகத்திற்கு கறுப்பு நிறம் ஏற்றப்பட்டது; சாத்திரப் படி, நெல், தானியங்கள், பால் போன்ற திவ்யப் பொருட்களில் அந்தப் பிரமாண்டமான சிலை ஊறவைக்கப்பட்டது. பின்னர், பெரிய கிரேன்கள் கொண்டு வரப்பட்டு படுக்கை வாட்டில் இருந்த பீடமும், சிலையும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் நிமிர்த்தப்பட்டு ஒன்றோடொன்று பொறுத்தப்பட்டன!

இப்படிப் பிரதிஷ்டை ஆன ஆஞ்சநேயர் பல மாதங்கள் திறந்த வெளியில்தான் நின்றிருந்தார்! அவரைச் சுற்றித்தான் பிறகு கோயில் எழும்பியது; பின் 1995 இல் கோயில் நிர்மாணப் பணிகள் முற்றுப் பெற்று சிறப்பாகக் கும்பாபிஷேகம் நடந்தது.

ஆரம்பம் முதலே ஏராளமானபக்தர்களைக் கவர்ந்து இழுத்தார் நங்கநல்லூர் ஆஞ்சநேயர். இன்றளவும் சனிக்கிழமைகளில் தரிசனத்துக்காகக் கோயிலின் வெளியே சாலையில் நிற்கும் வரிசையின் நீளம் மிகப் பெரிது. இந்த ஆஞ்சநேயர் (துன்பமும் நோயும் தீர்க்கும் ஆதிவியாதிஹர பக்த ஆஞ்சநேயர்) மிகுந்த வரப்பிரசாதியாகப் பக்தர்களால் கொண்டாடப்படுகிறார்.

பிரும்மாண்டமான கர்ப்பக்கிரக வாயில் அகண்டும் இருப்பதால், ஆஞ்சநேயரைக் கண்குளிரத் தொலைவில் நின்றும் தரிசிக்கலாம். இந்த ஆஞ்சநேயரை முகாந்திரமாக வைத்து நங்கநல்லூர் கண்டுள்ள வளர்ச்சி அந்த ஆஞ்சநேயர் போலவே பிரமாண்டமானதுதான்! இந்தப் பிரமாண்டமான ஆஞ்சநேயருக்குச் சார்த்தப்படும் பிரமாண்டமான வடை மாலைகள் அருள் மணத்தோடு சுவையும் கலந்தது.

அனுமார் வடை

தேவையான பொருட்கள்:

உளுந்து      2 படி

கருப்பு மிளகு      8 கரண்டி

அரிசி மாவு      10  ஸ்பூன்

தேவையான உப்பு

பொரிக்கத்தேவையான எண்ணெய்

செய்முறை:

உளுந்தை 30 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டுகிறார்கள். பின் அரிசி மாவு சேர்த்து கெட்டியாக கொர கொரப்பாக அரைக்கிறார்கள். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கிறார்கள்.  பத்து தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பை அரைத்த மாவில்சேர்த்து நன்கு கலக்குகிறார்கள். பின் எண்ணெயைக் காய வைத்து மாவை மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கிறார்கள்.   அனுமார் வடை பிரசாதம் தயார்.

Related Stories: