சலவைத் தொழிலாளி அடையாளம் காட்டிய ‘நம்பெருமாள்’

ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் சலவைத் தொழிலாளிக்கு ‘ஈரங்கொல்லி’ என்ற அருளப்பாடு உண்டு. ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் உற்சவப் பெருமாள் இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின்போது விக்ரகத்தை பாதுகாக்கும் பொருட்டு 48 வருடங்கள் திருவரங்கத்தை விட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர், திரும்ப கொண்டு வரப்பட்டார். ஒரு தரப்பினர் இது பெருமாளின் உற்சவ விக்ரகம் என்று ஒரு விக்ரகத்தை கொண்டு வந்தனர். எது உண்மையான விக்ரகம் என்று குழப்பம் நிலவியது. அப்பொழுது இவர்தான் பெருமாளா? என்று சரியாகக் கூற யாருமில்லை. கோயிலார் இக்கோயிலில் பெருமாளின் உடைகளைத் துவைத்துக் கொடுக்கும் சலவைத் தொழிலாளியை அணுகினர். அவர் 90 வயதுப் பெரியவர். கண் சரிவரத் தெரியவில்லை. இவர் எப்படி பெருமாளை அடையாளம் காட்டப்போகிறார் என்று நினைத்தனர் கோயிலில் கூடியிருந்தவர்கள். சலவைத் தொழிலாளி கூறினார்.

‘‘ஐயா, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யுங்கள். அதன் பின்னர் அவர் அணிந்திருந்த துணியை என்கிட்ட கொடுங்க’’ என்றார். அதன்படி பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தனர். அதன் பின்னர் அந்த ஆடையை அவரிடத்தில் கொடுத்தனர். அந்த சலவைத்தொழிலாளி அந்த ஆடையை தண்ணீரில் நனைத்து பிழிந்தார். அந்த நீரை எடுத்துப் பருகினார். பெருமாளின் ஈர ஆடைத் தீர்த்தத்தை அருந்திய உடனே, ‘‘இவரே நம் பெருமாள்’’ என்று உறுதிபடக் கூறினார். அந்த சலவைத் தொழிலாளி கூறிய நாமமே ‘‘நம்பெருமாள்’’ அதன்பின்னர் அவ்வாறே அழைக்கப்பட்டார் உற்சவர். இந்த நிகழ்விலிருந்து சலவைத் தொழிலாளிக்கு ‘ஈரங்கொல்லி’ என்ற அருளப்பாடு இக்கோயிலில் உண்டாயிற்று.

தொகுப்பு: சு.இசக்கிமுத்து

Related Stories: