இறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்கு மற்ற எல்லா வழிபாட்டு முறைகளை விட விரைவில் பலன் தரக்கூடியதாக விரத வழிபாட்டு முறை இருக்கிறது. அதிலும் தமிழர்களின் விருப்பத்திற்குரிய கடவுளான முருகப்பெருமானை வழிபடுவதற்கு கந்த சஷ்டி விரதத்தை போன்றே சிறந்த பலன்களை அளிக்க கூடிய ஒரு விரதமாக “கார்த்திகை விரதம்” இருக்கிறது. இக்கார்த்திகை விரதம் மேற்கொள்ளும் முறை பற்றியும், அவ்விரதத்தால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று பெயர் பெற்ற முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு விரத முறை தான் இந்த கார்த்திகை விரதம். கார்த்திகை விரதத்தை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வது முருகனின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்யும். எந்த ஒரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு மேல் இருக்கும் நாளே கார்த்திகை நட்சத்திர நாளாக கருத வேண்டும். கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு உட்கொண்டு அன்று இரவு உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க தொடங்க வேண்டும்.