வீட்டில் வெள்ளெருக்கு செடி வளர்க்கலாமா?

விண்ணுலகில் வாழ்ந்த தேவர்களே என்றும் சிரஞ்சீவியாக பூலோகத்தில் செடிகள், மரங்கள், மூலிகைகள் வடிவில் வாழ்கின்றனர் என்கிற ஒரு கருத்து ஆன்மீக அன்பர்கள் பலருக்கும் இருக்கிறது. உலகெங்கிலும் பல கோடி வகையான செடிகள், தாவரங்கள், மூலிகை வகைகள் இருக்கின்றன. அவற்றில் பல தெய்வீக ஆற்றல் வாய்ந்தவையும், உயிர் காக்கும் தன்மையும் கொண்டதுமாகும். பல அபூர்வ மூலிகைகள் நிறைந்த நாடாக இந்திய நாடு இருக்கிறது. நமது நாட்டில் அனைத்து விடயங்களுக்கும் எழுதப்பட்ட சாஸ்திர விதிகளை போன்றே, நாம் வசிக்கின்ற வீட்டிற்கருகில் எத்தகைய செடிகளை வளர்க்கலாம். அப்படி வளர்த்தால் அவருக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்பதை பற்றியும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்காலத்தில் பெரும்பாலான மக்களிடம் வெள்ளை எருக்கன் செடியை வீட்டிற்கு முன்பாக வளர்க்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. உண்மையில் வெள்ளெருக்கு செடியை வீட்டிற்கு முன்பாக வளர்க்கலாமா என்பது குறித்தும், அப்படி வளர்த்தால் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

எருக்கன் செடியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாம் சாலையோரங்களில் காண்கின்ற சாதாரண எருக்கஞ்செடி. மற்றொன்று தெய்வீக மரமாக கருதப்படும் வெள்ளை எருக்கன் செடி. வெள்ளெருக்கன் செடி பல அற்புதமான ஆற்றல்கள் கொண்ட தெய்வீக மூலிகையாகும். இந்த வெள்ளெருக்கு செடியை பற்றி சித்தர்கள் கண்டுபிடித்த சித்த வைத்தியத்தில் மனிதர்களின் பல நோய்களை தீர்க்கம் ஒரு அற்புதமான விருட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இறையாற்றல் மிகுந்த இந்த வெள்ளை எருக்கன் செடி வீட்டில் வளர்க்கலாமா அல்லது வேண்டாமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான விடையை அறிந்து கொள்வதற்கு முன்பாக சில அடிப்படை விடயங்களை இங்கே தெரிந்து கொள்வது அவசியமாகும்.

எருக்கஞ்செடி என்பது ஒரு தெய்வீக மரமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடியாக இருக்கிறது. பொதுவாக செடிகள், மரங்கள் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஆனால் இந்த வெள்ளை எருக்கன் செடி 12 ஆண்டுகள் நீரின்றி இருந்தாலும் சிறப்பாக வளர்ச்சி அடையும் தன்மை கொண்ட ஒரு அபூர்வ செடி வகையாக இருக்கிறது. மேலும் இந்த வெள்ளை எருக்கன் செடி சிவபெருமானின் அம்சம் கொண்டதாக கருதப்படுகிறது.

பொதுவாக மரங்களில் இருந்து பால் போன்ற திரவம் வடியும் பால் வகை செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பது வாஸ்து சாஸ்திர ரீதியாக உள்ளது. எனினும் ஒரு சில அறிஞர்கள் இந்த வெள்ளை எருக்கன் செடி வீட்டிற்கு முன்பாக உணரலாம் என கூறுகின்றனர். வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற வெள்ளை எருக்கன் செடி அந்த வீட்டிற்குள்ளாக துஷ்ட சக்திகள் மற்றும் தீய மாந்திரிக சக்திகள் நுழையாதவாறு தடுக்கும் ஆற்றல் மிக்க பாதுகாப்புக் கவசம் போல் செயல்படுகிறது. எனினும் சிவபெருமானின் அம்சம் கொண்டதாக கருதப்படுகின்ற வெள்ளருக்கன் செடியை முறையாக பராமரிப்பவர்கள், அந்தச் செடி வளரும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள், தங்களையும் தங்கள் வீடுகளையும் எப்போதும் சுத்தபத்தமாக வைத்துக் கொள்பவர்கள் மட்டுமே வீட்டுக்கு முன்பாக வளர்க்கலாம் என்றும், அப்படி இயலாதவர்கள் அத்தகைய செடிகளை சிவபெருமான் கோவில் நந்தவனங்களில் நட்டு வைப்பதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.

மிக சக்தி வாய்ந்த இந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டிற்கு முன்பாக வளர்க்க இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் அல்லது உங்களுக்குத் தெரிந்த சித்த வைத்தியரிடம் கூறி வெள்ளெருக்கன் வேர் கட்டை ஒன்றை வாங்கி, உங்கள் வீட்டுற்கு முன்பாக கட்டி தொங்கவிடுவதாலும் அல்லது உங்கள் வீட்டின் வாயில் அருகில் வைத்து விடுவதாலும் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து வீட்டில் உள்ளவர்களின் வாழ்வில் சுபிட்சங்களை ஏற்படுத்துகிறது.

Related Stories: