திரையுலகினர் பொங்கல் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்

சென்னை: பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். திரையுலகினரும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே குவிந்து வந்தனர். ரசிகர்கள் தன்னைப் பார்க்க திரண்டு வந்ததை அறிந்த ரஜினிகாந்த், தனது கைகளை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து நிருபர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்ன அவர், ‘நம் வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும். நிம்மதியாக இருக்கலாம்’ என்று அட்வைஸ் செய்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என்றார். வழக்கம்போல் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் தனது ரசிகர்களுக்கு நேரில் வாழ்த்து சொல்வது வழக்கம். தவிர, திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா, தனுஷ், ஜெயம் ரவி, அருண் விஜய், சிவகார்த்திகேயன், ஹரீஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், சிரஞ்சீவி உள்பட பல நடிகர், நடிகைகள் பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களை அவர்களது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

The post திரையுலகினர் பொங்கல் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: