திண்டுக்கல்: தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏப்.24ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் ஏப்.24ம் தேதி திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.அன்று காலை 9 மணி முதல் போட்டிகள் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனி நபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழச்சி நடத்திட அனுமதிக்கப்படுவர். குரலிசை போட்டியிலும், நாதஸ்சுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின் கிதார், சாக்சபோன், கிளாரினெட், தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம்( பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம், நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வரவேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவர். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள், மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்….
The post கலைத்துறையில் சிறந்தவர்களா நீங்கள்? அப்ப 24ம் தேதி போட்டிக்கு ஆஜராயிடுங்க… appeared first on Dinakaran.