கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டு தருவதாக கூறி பெண்ணிடம் நூதன கொள்ளை: இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி புருஷோத்தமன். இவரது மனைவி சாந்தி(50). இவர் நேற்று முன்தினம் ஈக்காடு பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் வந்த இளம்பெண் வண்டியை நிறுத்தி சாந்தியிடம், `நீங்கள் கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்துள்ளீர்களா’ என கேட்டுள்ளார். அதற்கு சாந்தி தான் நகை அடகு வைத்து உள்ளதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அந்த பெண் தான் கூட்டுறவு வங்கியில் இருந்து வருவதாகவும், அடகு வைத்த நகையை தள்ளுபடி செய்து மீட்டுத் தருவதாக கூறி தன்னுடன் வங்கிக்கு வருமாறு ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், ஈக்காடு ஏரிக்கரை அருகே சென்றபோது ஸ்கூட்டியை சாலையோரம் நிறுத்தி சாந்தியிடம், `உங்களது கழுத்தில் உள்ள செயினை கொடுத்தால் அதனை வங்கிக்கு அனுப்பி உங்கள் நகை தானா என உறுதி செய்கிறேன்’ என தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய அவர் தன் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தாலிச் சரடை கழட்டி அவரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையை வாங்கி மேலும் கீழும் பார்த்த அந்த பெண் தன் கழுத்தில் அணிந்து கொண்டு செல்பி எடுத்துள்ளார். பின்னர் திடீரென அந்த பெண் தயாராக இருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏறி நகையுடன் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி அழுது கூச்சலிட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சாந்தி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். …

The post கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டு தருவதாக கூறி பெண்ணிடம் நூதன கொள்ளை: இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: