திருப்பத்தூர் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் எரிப்பதால் புகையால் தவிக்கும் மக்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் குடியிருப்பு பகுதிக்குள் கொட்டி எரிப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தினமும் 7 டன் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் உள்ள ப.உ.ச நகர் குப்பைக்கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. தற்போது ப.உ.ச நகரில் உள்ள குப்பைக்கிடங்கில் பல ஆயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் தேங்கி உள்ளதால் அருகில் உள்ள சுடுகாட்டில் குப்பைகளை கொட்டப்படுகிறது. இதனால் சடலங்களை புதைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணி பல கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டு தற்போது மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருகிறது. இதனால் தற்போது 36 வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கொட்டி தீயிட்டு கொளுத்துகின்றனர். இரவு மற்றும் பகலில் இவ்வாறு தீ வைத்து எரிப்பதால் அதிலிருந்து வரும் கரும்புகையால் குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் மூச்சுச்திணறல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை குடியிருப்பு பகுதிக்குள் தீயிட்டு எரிப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருப்பத்தூர் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் எரிப்பதால் புகையால் தவிக்கும் மக்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: