லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென்று நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் பட தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை விஷாலின் நிறுவனம் தயாரித்துள்ளது. எனவே, எங்களுக்கு தரவேண்டிய கடன் தொகையை தராமல் தமிழ் உள்பட பிற மொழிகளில் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, டெபாசிட் ரசீதை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

The post லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: