டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து: 30 லட்சம் மதுபானம் எரிந்து நாசம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பஸ் நிலைய மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ₹30 லட்சம் மதுபானங்கள் எரிந்து நாசமாகின.தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் 3 நாட்களுக்கு மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலைய மேம்பாலம் அருகே இயங்கும் டாஸ்மாக் கடையில் சூபர்வைசர்களாக ஆறுமுகம், நட்ராஜ், சேல்ஸ்மேன்களாக தணிகையரசு, சங்கர், பாலாஜி ஆகியோர் வேலை செய்கின்றனர். கடந்த 16ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து, அனைவரும் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், டாஸ்மாக் கடையில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில், தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக சென்ற மக்கள், இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று டாஸ்மாக் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்களில் பரவியிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், அங்கிருந்த ₹30 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகை மதுபான பாட்டில்கள் வெடித்து சிதறி நாசமாகின.புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதில், டாஸ்மாக் கடை 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மர்மநபர்கள் கடையை உடைத்து மதுபாட்டில்களை உடைத்து தீ வைத்தனரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அங்கு 3 மணிநேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது….

The post டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து: 30 லட்சம் மதுபானம் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: