திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய அரசு மேல்நிலைப்பள்ளி நடைபாதை மாணவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம்

 

ஊட்டி, ஜூன் 18: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட கமர்சியல் சாலையில் இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை வழியாகவே அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மாணவ, மாணவிகள் செல்கின்றனர். இந்நிலையில், தாஸ் ஓட்டல் பகுதியில் இருந்து நகராட்சி அலுவலகம் செல்லும் நடைபாதையை இணைக்கும் நடைபாதையின் இரு புறங்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்ட சுகாதாரம் இன்றி காட்சியளிக்கிறது.
மேலும், இந்த நடைபாதையை பலரும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.

இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. நாள் தோறும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த நடைபாதையையே பயன்படுத்துகின்றனர். இதனால், இவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், நகராட்சி அலுவலகம் உட்பட பலரும் இந்த நடைபாதையை பயன்படுத்தப்படும் நிலையில், முகத்தை மூடிக்கொண்டே செல்ல வேண்டியுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும், இதனை சீரமைத்து கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

The post திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய அரசு மேல்நிலைப்பள்ளி நடைபாதை மாணவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: