காரில் குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது

நல்லம்பள்ளி, மே 16: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தொப்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கெங்களாபுரம் சர்வீஸ் சாலையில் இரண்டு பேர் காரில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், சுற்றிவளைத்து விசாரித்தனர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, மூட்டைகளை பரிசோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, குட்கா கடத்திய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏ.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(34), சுரேஷ்(24) ஆகியோரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post காரில் குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: