கருர், ஏப். 22: போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட சீருடை பணியாளர் தேர்வாணையம், 1352 சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணிக் காலியிடங்களுக்கான நேரடி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 3ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கருர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்ரல் 23ம்தேதி நடத்தப்படவுள்ளது.
மேலும், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, வைபை வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணைய வழித்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டுகளில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4, டிஎன்யுஎஸ்ஆர்பி, டிஆர்பி ஆகிய பயிற்சி வகுப்புகளில் அதிகப்படியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22ம் தேதிக்குள் (இன்று) நேரடியாகவோ அல்லது 9499055912 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பினை கருர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.