ரோம்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை ரோமில் நடந்தது. கடந்த 2015ல் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் அதிகளவில் யுரேனியத்தை செறிவூட்டுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது. ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் மூலம் பல அணு ஆயுதங்களை உருவாக்க முடியும். இதை தடுக்கும் வகையில் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக கட்டுப்படுத்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும், இல்லாவிட்டால் ஈரான் மீது இதுவரை நடந்திராத வகையில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை ஓமன் நாட்டில் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காததால் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய ஓமன் நாடும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. ஓமனில் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் நேற்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அங்குள்ள ஓமன் தூதரகத்தில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்தம் இறுதியாகும் என தெரிகிறது. முன்னதாக, ஓமன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடனடியாக மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
The post அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா – ஈரான் 2ம் கட்ட பேச்சுவார்த்தை: ரோமில் நடந்தது appeared first on Dinakaran.