சிறுமிகள் அளித்த பாலியல் புகார்: மதபோதகரின் மைத்துனரும் கைது


கோவை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மதபோதகர். இவர், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், காட்டூர் மத்திய அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். கடந்த சனிக்கிழமை ஜான் ஜெபராஜை மூணாறில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமிகளுக்கு மேலும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். விசாரணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது துடியலூர் பூம்புகார் நகர் விகேஆர் நெஸ்ட் 5வது வீதியை சேர்ந்த ஜான் ஜெபராஜின் மைத்துனர் பென்னட் ஹரீஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போக்சோ வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post சிறுமிகள் அளித்த பாலியல் புகார்: மதபோதகரின் மைத்துனரும் கைது appeared first on Dinakaran.

Related Stories: