தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பிஎஸ்பி வழக்கு: விஜய் பதில் தர சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அந்த கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே இந்த சின்னத்தை பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது. ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியபோது, தவெக கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 29ம் தேதிக்குள் தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பிஎஸ்பி வழக்கு: விஜய் பதில் தர சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: