இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமைதாரர் பிரபு என்றும் அந்த வீட்டின் மீது ராம்குமாருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார். நீதிமன்றம் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து உத்தரவு பிறப்பித்ததற்கு வெகு காலம் முன்பே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனால் நீதிமன்றம் ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனபாக்கியம் என்டர்பிரைசஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான அன்னை இல்லம் வீட்டில் ராம்குமார் தனது உரிமையை விட்டுக் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை என்றும் சொத்து உரிமை நடிகர் பிரபுவுக்கு இருக்கிறதா என்பதை முழு விசாரணைக்குப் பிறகு முடிவு செய்ய முடியும் என்பதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
The post நடிகர் சிவாஜி இல்ல வழக்கு.. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.