சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர் வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் தவறானது போலவும். அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. முழுக்க, முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை எளிதில் உணர முடிகிறது.
எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப் போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும் எனவும் அறிவிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ஜாட்’ இந்தி திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் திரையரங்கு நிர்வாகிகளிடம் நாம் தமிழர் கட்சியினர் நேற்று மனு அளித்தனர். இதேபோல் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இத் திரைப்படம் ஓடியது. அந்த வணிக வளாகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஜாட் திரைப்படத்துக்கு தடை: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.