நடத்தை சந்தேகத்ததால் பயங்கரம் நிறைமாத கர்ப்பிணி கழுத்து நெரித்துக்கொலை: காதல் கணவன் கைது

திருமலை: நிறைமாத கர்ப்பிணியை அவரது காதல் கணவன், கழுத்து நெரித்துக்கொலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவைச் சேர்ந்தவர் ஞானேஸ்வர்(27). அதே பகுதியைச் சேர்ந்தவர் அனுஷா (24). இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். சில மாதங்களில் இருவீட்டாரும் சமாதானம் அடைந்து இவர்களை ஏற்றுக்கொண்டனர். தம்பதி இருவரும் மதுராவாடா பி.எம். பாலம் ஊடா பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர். பட்டதாரியான ஞானேஸ்வர், அங்குள்ள 2 இடங்களில் `பாஸ்ட்புட்’ கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அனுஷா கர்ப்பிணியானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு சில நாட்களுக்கு முன் இருவீட்டார் இணைந்து தங்களது உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோரை அழைத்து சிறப்பாக சீமந்தம் செய்தார்கள். இதையடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுஷாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஸ்கேன் மூலம் சோதனை செய்த டாக்டர்கள், ஏப்ரல் 15ம்தேதி (இன்று) குழந்தை பிறக்கும் என தெரிவித்தார்களாம். இதனால் தம்பதி மற்றும் இருவீட்டாரும் உற்சாகத்தில் இருந்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக அனுஷா, யாரிடமோ அடிக்கடி செல்போனில் பேசுவாராம். இதனால் ஞானேஸ்வருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். குழந்தை பிறக்கும் தேதியை டாக்டர்கள் தெரிவித்த நிலையில் நேற்று தம்பதி இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஞானேஸ்வர், கர்ப்பிணி மனைவியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது.

பின்னர் அனுஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்த ஞானேஸ்வர், அனுஷாவுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு படுக்கையில் மயங்கி விழுந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இருவீட்டாரும் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். அனுஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
ஆனால் மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக அனுஷாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார், ஞானேஸ்வரிடம் விசாரணை நடத்தினர். அதில், நடத்தை சந்தேகத்தால் தனது கர்ப்பிணி மனைவியை கழுத்து நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஞானேஸ்வரை நேற்றிரவு கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடத்தை சந்தேகத்ததால் பயங்கரம் நிறைமாத கர்ப்பிணி கழுத்து நெரித்துக்கொலை: காதல் கணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: