சென்னை: மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகையில், அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக செயற்குழு முதல் முறையாக கூடுகிறது.
ஏற்கனவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்டாமல் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டதால் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் செயற்குழுவில் விளக்கம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மே 2-ம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு appeared first on Dinakaran.