அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் தினமும் 10 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் தினந்தோறும் 8 முதல் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு நடந்த கொடூரமான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து வெள்ளியன்று நாடு கடத்தப்பட்டார். இவரை 18 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து சிஜிஓ வளாகத்தில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைமை அலுவலகத்திற்குள் மிகவும் பாதுகாப்பான அறையில் அடைக்கப்பட்டுள்ளார். 24மணி நேரமும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினந்தோறும் ராணாவிடம் தேசியபுலனாய்வு அதிகாரிகள் 8 முதல் 10 மணி நேரம் வரை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விசாரணைக்கு ராணா ஒத்துழைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

என்ஐஏ தலைமை விசாரணை அதிகாரி ஜெயா ராய் தலைமையிலான அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணா இதுவரை அதிகாரிகளிடம் பேனா, பேப்பர் அல்லது நோட்பேட் மற்றும் குர்ஆன்ஆகிய மூன்று விஷயங்களை மட்டுமே கேட்டுள்ளதாகவும், அதனை அதிகாரிகள் அவருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிகின்றது. குறிப்பிட்ட உணவு தொடர்பாக ராணா இதுவரை எந்த கோரிக்கையையும் எழுப்பவில்லை. நிலையான நெறிமுறைகளின் படி குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் உணவு பொருட்களே ராணாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

The post அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் தினமும் 10 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: