கிருஷ்ணகிரி, ஏப்.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று, (12ம் தேதி) பொது விநியோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று(12ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் குரியனப்பள்ளி, பர்கூர்- பசவண்ணகோயில், போச்சம்பள்ளி -பாப்பாரப்பட்டி, ஊத்தங்கரை -மிட்டப்பள்ளி, ஓசூர் -கர்னூர், சூளகிரி -அத்திமுகம், தேன்கனிக்கோட்டை -உப்பாரப்பள்ளி, அஞ்செட்டி -அத்திநத்தம் ஆகிய 8 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் முகாமில் பங்கேற்று, தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவரிடம் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
The post பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.
