சாத்தான்குளம், ஏப். 10: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை எடுத்திருந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பரவலாக மழையும் பெய்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரலுடன் கூடிய மழை காணப்படுகிறது. சாத்தான்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் பரவலாக மழை பெய்தது. இதனால் காலையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் 2வது நாளாக நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென வானில் திரண்ட கருமேகங்கள் மழையை பொழிவித்தன. இந்த மழை சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததால் சாலை மற்றும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். முதலூர், தட்டார்மடம் பகுதிகளிலும் பரவலாக மழை காணப்பட்டது. நாசரேத், புதுக்கோட்டை, வாகைக்குளம், வைகுண்டம், புறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
The post சாத்தான்குளம் பகுதியில் 2வது நாளாக பரவலாக மழை appeared first on Dinakaran.