துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சார்பில் ஐ.பரந்தாமன், நா.எழிலன், காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேஷ் குமார், விசிக சார்பில் சிந்தனை செல்வன் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், மாரிமுத்து, மார்க்சிஸ்ட் நாகை மாலி, சின்னதுரை, மதிமுக டாக்டர் சதன் திருமலைக்குமார், பூமிநாதன், பாமக ஜி.கே. மணி, மமக எம்.எச். ஜவாஹிருல்லா, அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்த்துக்கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம் அதற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்துக் கொண்டு வருகிறது. நீட் தேர்வின் மாபெரும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் நாம் போராடினோம்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2021ம் ஆண்டு முதல் மாபெரும் சட்டப் போராட்டத்தை தொடங்கினோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியை பெரும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் இருக்கும் பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது என்று இந்தக் குழு தெரிவித்தது.
எனவே, 2006ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்தது. இந்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு செயலாளர்களை கொண்ட குழு நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நான் முன்மொழிந்தேன். அந்தச் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
இந்த சட்டம் முன்வடிவை உடனடியாக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தன்னுடைய அரசியல் சட்டக் கடமையை செய்யாமல், அரசியல் செய்ய ஆரம்பித்தார் என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். ஆனால், நாமும் சளைக்காமல் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற கடுமையாக போராடினோம். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அதை திருப்பி அனுப்பினார். உடனடியாக, 2022ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இதே மாதிரியான சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நாம் நடத்தினோம்.
அதில், இந்தச் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் இந்த சட்ட முன்வடிவு மீண்டும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். பிரதமர், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இந்த சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசு தலைவர் அலுவலகத்தில் நேரடியாக சென்று மனு அளித்தார்கள். இந்த தொடர் முயற்சிகளின் பயனாக ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தார் என்ற செய்தியை 2022 மே 4ம் தேதி சட்டமன்றத்தில் நான் பகிர்ந்து கொண்டேன். நீட் விலக்கு தொடர்பான நம்முடைய போராட்டத்தின் அடுத்த கட்டமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் நீட் விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதலை மறுத்துவிட்டார்கள். ஒன்றிய அரசு நம்முடைய கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
எனவே அந்த வகையில் இந்த பிரச்சனையில் அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான உங்களுடைய மேலான ஆலோசனைகளை நீங்கள் எல்லோரும் வழங்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வு அல்ல பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ சில தங்களின் சுயநலனுக்காக சொல்லி ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி நடத்தும் தேர்வு அது. அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருவது உங்களுக்கு தெரியும் நாட்டுக்கும் நன்றாக தெரியும்.
நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்ட போராட்டத்தை தூய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார். பின்னர், கீழ்க்காணும் தீர்மானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இந்தவகையில், நீட் தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர். பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.
அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்த சட்டமுன்வடிவுகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நீட் விலக்கு தொடர்பான வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். பின்னர், துணை முதல்வரால் முன்மொழியப்பெற்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிமுக, பாஜ பங்கேற்கவில்லை: நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக நேற்று நடந்த அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக, பாஜ கட்சிகள் பங்கேற்கவில்லை.
The post நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.