சென்னை: கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது என்பதை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளதையும், 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கடுமையாக எதிர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 28.06.1974 அன்று ஒன்றிய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் உடனடியாக மறுநாளே 29.06.1974 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதையும் தனது கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு பிரச்சினையில் ஒன்றிய அரசின் முடிவை வன்மையாக எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21.08.1974 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத்தீவினை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலையிலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நிலையற்றதாக மாறியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமருக்கு 17.06.2021 அன்று நடைபெற்ற முதல் சந்திப்பின்போது, இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய கோரிக்கைகளை அடுத்தடுத்த சந்திப்பின் போதும் வலியுறுத்தியுள்ளதாகவும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் பலமுறை கடிதங்களை எழுதியுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், 530 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், நமது மீனவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் நமது மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளதால், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்றும் அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டுமென்பதை வலியுறுத்திநேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.