நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து கட்சியினருடன் ஆர்டிஓ ஆலோசனை

முசிறி, மார்ச் 27: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் தொட்டியம் சேக்கிழார், முசிறி மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், நாம் தமிழர், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொது இடத்தில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் இருக்கக் கூடாது, அதனை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றி கொள்வது தொடர்பான கருத்துக்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பதில் அளித்த அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்கள் சார்ந்து இருக்கும் அரசியல் கட்சியின் அடையாளமாக திகழும் கொடிக் கம்பங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைத்துக் கொள்ள பொதுவான இடம் ஒன்றை தேர்வு செய்து கொடுத்தால் அங்கே அமைத்துக் கொள்வதாகவும், அதை விடுத்து உடனடியாக கொடி கம்பங்களை அகற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

The post நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து கட்சியினருடன் ஆர்டிஓ ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: