மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு தடையில்லை: எதிர்த்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை: மதுரையைச் சேர்ந்த மயில்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டுமானமும் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை வண்டியூர் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘வண்டியூர் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறுவது சரி தான். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை வேறு உத்தரவு போட முடியாது. சம்பந்தப்பட்ட இடத்தை மதுரை மாநகராட்சி கடந்த 1981ம் ஆண்டு உரக்கிடங்கு தயாரிப்பதற்கான இடமாக மாற்றி மறு வரையறை செய்துள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடமாக உள்ளது. எனவே, இந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு தடை விதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

The post மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு தடையில்லை: எதிர்த்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: