கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம், மார்ச் 26: கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் உட்பட 4 மீனவர்கள், நேற்று காலை மீன் பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். அப்போது, அணு மின் நிலைய பகுதி கடற்கரையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் ஒரு மர்ம பொருள் மிதப்பதை பார்த்த மீனவர்கள், அருகாமையில் சென்று அந்த மர்ம பொருளை கயிறு மூலம் கட்டி இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கடலோர காவல் படைக்கும், சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். கடலோர காவல் படை போலீசார் மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு வந்து பார்த்து, அந்த மர்ம பொருளை பரிசோதனை செய்தனர். இது சோலாரால் இயங்கக்கூடிய ஒரு ரேடார் கருவி என்றும் இதை இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் கப்பல்களில் திசை காட்டுவதற்கும், பெரிய, பெரிய மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கும் பயன்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த மர்ம பொருளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே மிதந்து வந்த இந்த மர்ம பொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: