பெரியபாளையம், மார்ச் 24: பெரியபாளையம் அடுத்த, வடமதுரை ஊராட்சியில் உள்ள ஏரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவரது மகன் ரவிக்குமார் (12). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் ரவிக்குமார், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தையை பார்க்கச் சென்று அங்கேயே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதனையடுத்து, சிறுவனை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post வயலில் விளையாடியபோது பாம்பு கடித்து சிறுவன் பரிதாப பலி: பெரியபாளையம் அருகே சோகம் appeared first on Dinakaran.