நாக்பூரில் பொது சொத்துக்கள் சேதம்; கலவரக்காரர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கப்படும்: முதல்வர் பட்நவிஸ் எச்சரிக்கை

மும்பை: நாக்பூர் கலவரத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கலவரக் காரர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூலிக்கப்படும் எனத் தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தேவைப்படால் உபி ஸ்டைலில் புல்டோசர் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டுமெனக் கோரி நாக்பூரில் பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் புனித நூல் எரிக்கப்பட்டதாக தகவல் பரவியதால் நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுவரை 104 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் 17 பேரிடம் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

விஸ்வ இந்து பரிஷன், பஜ்ரங் தளம் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட 1,200 மீது 5 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிசி டிவி காட்சிகள் மூலம் 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களை பிடிக்க 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், ‘‘நாக்பூர் கலவரத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. அதற்கான இழப்பீடு கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். பணம் செலுத்தத் தவறினால், அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து விற்கப்படும். போலீசாரைத் தாக்கியவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அரசாங்கம் ஓயாது. இந்த சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்ததாக கூறமுடியாது. ஆனால், உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இந்த கலவரத்துக்கு வேறு எந்த அரசியல் கோணமும் காரணம் கிடையாது. இந்த கலவரம் காரணமாக பிரதமர் மோடியின் திட்டமிடப்பட்ட வருகை பாதிக்காது’’ என்றார். உபியை போல கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மகாராஷ்டிராவுக்கு என தனி பாணி இருக்கிறது. தேவைப்பட்டால் இங்கும் புல்டோசர்கள் வரும்’’ என்றார்.

The post நாக்பூரில் பொது சொத்துக்கள் சேதம்; கலவரக்காரர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கப்படும்: முதல்வர் பட்நவிஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: