மதிப்பிழப்பு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற புரோக்கராக செயல்பட்ட அதிமுக நிர்வாகி கைது

புதுச்சேரி: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை ஜான்பால் நகரை சேர்ந்த சலீம்ராஜா(60) என்பவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரவரதன்(60) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுந்தரவரதன் தன்னிடம் புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுக்களை பல மடங்கு தருவதாக சலீம்ராஜாவிடம் கூறினார்.

இதுகுறித்து சலீம்ராஜா, அவருடைய மகன் பெரோசிடம் தெரிவித்தார். பின்னர் பெரோஷ், அவரது நண்பர்களான உதயா, சதீஷ், தினகரன் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மூவரும் ரூ.30 லட்சத்தை சலீம்ராஜா மூலமாக சுந்தரவரதனிடம் கொடுத்தனர். ஆனால் அவர் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதுதொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ரியல் எஸ்டேட் புரோக்கர்களான சுந்தரவரதன், சென்னை அசோக் நகரை சேர்ந்த ராமானுஜம்(48), கோவை சந்தானம் (48) மற்றும் சலீம்ராஜா ஆகியோரை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் முதலியார்பேட்டை போலீசார் விசாரணைக்காக 5 நாள் காவலில் எடுத்துள்ளனர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்ட அதிமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் நல்லமுத்து(எ) கண்ணன்(40) இதில் புரோக்கராக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் திண்டுக்கலுக்கு சென்று நல்லமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்து புதுவை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post மதிப்பிழப்பு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற புரோக்கராக செயல்பட்ட அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: