ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு ஒன்றிய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு

பெங்களூரு: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் நிறுவனம், ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் பதிவிடப்படும் கருத்துகளை நீக்குவது குறித்த உத்தரவுகளை ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் பிறப்பிக்க வேண்டும். ஆனால் 79(3)(பி) பிரிவின் கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் ஒன்றிய அரசு ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவிடுகிறது. சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், சட்ட விரோதமான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சென்சார் முறைகளை ஒன்றிய அரசு பின்பற்றுவதாகவும், அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

ஐடி சட்டப்பிரிவு 79(3)(பி) பிரிவின் கீழ் ஆன்லைன் பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிடுவதன் மூலம், எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுப்பது, உரிய விசாரணை நடத்துவது என பல்வேறு நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்களை சென்சார் செய்வதற்கான கருவியாக சஹ்யோக் போர்ட்டல் என்ற ஒன்றிய அரசு உருவாக்கிய போர்ட்டல் திகழ்கிறது. அதில், எக்ஸ் நிறுவனம் உறுப்பினராகவில்லை. சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உரிய ஆய்வு செய்யாமல் சில பதிவுகளை நீக்குமாறு உத்தரவிட்டு அழுத்தம் கொடுப்பதால் தான் அந்த போர்ட்டலில் இணையவில்லை. நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் ஆன்லைன் பதிவுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் மற்றொரு முயற்சி இது இவ்வாறு எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு ஒன்றிய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: