காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: அமைச்சர் உறுதி

சென்னை: காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசும்போது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கினார். அதில், திமுக ஆட்சியில் வெட்டப்பட்ட 11 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அதிலும் நீர் வரவில்லை. நீருக்கு பதில் காற்று தான் வருகிறது.

அமைச்சர் துரைமுருகன்: காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைத்து தொடங்கியது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். நீங்கள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தீர்களே, அந்த திட்டத்தை திரும்பி கூட ஏன் பார்க்கவில்லை. கால்வாய் வெட்டினால் தொடர்ச்சியாக வெட்ட வேண்டும். நீங்கள் என்ன செய்தீர்கள், இடை, இடையே இடைவெளி விட்டு கால்வாய் வெட்டினீர்கள். இந்த உலகத்திலே இப்படி இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு, யாரும் கால்வாய் வெட்ட மாட்டார்கள். இப்படி கால்வாய் வெட்டியது நீங்கள் தான்.

(அவையில் சிரிப்பு) எடப்பாடி பழனிசாமி: நிதி ஒதுக்காததற்கு ஏதேதோ காரணத்தை அமைச்சர் சொல்கிறார். அவருக்கு எல்லாமே தெரியும். மூத்த அமைச்சர். நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் தான் கால்வாய் வெட்ட முடியும். அதைத்தான் எங்கள் ஆட்சியில் செய்தோம். எனவே, சாக்குபோக்கு சொல்வதை விட்டு விட்டு, வேகமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த திட்டத்தால் 5 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள். நீங்கள் செய்யவில்லை என்றால், மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
அமைச்சர் துரைமுருகன்: இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: