ஒன்றிய அரசுக்கு சொந்தமான கலாஷேத்ரா நிலத்தை போலி ஆவணம் மூலம் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி: மோசடியாக பவர் பதிவு செய்யப்பட்டதால் அதிர்ச்சி


சென்னை: ஒன்றிய அரசுக்கு சொந்தமான கலாஷேத்ரா நிலத்தை போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான கலாஷேத்ரா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவரே டெல்லியின் கவர்னர்தான். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 50 ஏக்கருக்கும் மேல் இடம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியான 2.61 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு கும்பல் முயன்றுள்ளது. அவர்கள் அதற்கான பட்டாவையும் வைத்திருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்பதிவாளர், பதிவு செய்ய மறுத்து விட்டார். இது குறித்து, அந்தப் பத்திரத்தை ஆய்வு செய்த அதிகாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். கலாஷேத்ரா நிறுவனத்துக்கு சொந்தமாக 50 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியான 2.61 ஏக்கர் நிலத்தை 1945ம் ஆண்டு ஒருவருக்கு சொந்தமானது போலவும், அவரது வாரிசுகள் தற்போது ஒருவருக்கு பவர் கொடுப்பதுபோலவும் கடந்த ஆண்டு சைதாப்பேட்டை ஜாய்ண்ட்-1 அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் பல நூறு கோடிகள். இந்த நிலத்தின் பவர் பத்திரம் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்தது போலவும், அதற்காக ேபாலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ்கள் கொடுத்ததுபோலவும் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனர். மேலும் வருவாய் துறையின் உதவியுடன் கலாஷேத்ரா நிறுவனத்தின் சர்வே எண்ணிலேயே ஒரே பட்டாவில் கலாஷேத்ரா மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தவர்களின் பெயர்களுக்கு பட்டா வாங்கியுள்ளனர்.

இந்த பட்டா மற்றும் சைதாப்பேட்டை ஜாய்ண்ட் 1, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பவர் பத்திரத்துடன்தான் தற்போது அந்த நிலத்தை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் விற்பனை செய்ய முயன்றுள்ளனர் என்று தெரியவந்தது. போலியான ஆவணம் மூலம் பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் ராஜசேகர், தற்போது தி.நகர் பகுதிக்கு மாறுதல் வாங்கிச் சென்று விட்டார். இவர் வழக்கமாக போலியான ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்தால், பெரிய அளவில் பணத்தை பெற்றுக் கொண்டு வேறு பகுதிக்கு மாறுதல் வாங்கிச் சென்று விடுவார். தற்போதும் அப்படித்தான் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

வழக்கமாக வாரிசு அடிப்படையில் ஒரு நிலத்தை பதிவு செய்ய வந்தால், முன் ஆவணம் இருக்க வேண்டும். ஆனால், 1945ம் ஆண்டு ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறும்போது, முன் ஆவணம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன் ஆவணமும் இல்லாமல் பவர் பத்திரத்தை பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் இருந்தே போலியான ஆவணம் மூலம், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பத்திரப்பதிவு குறித்து முறையாக விசாரணை நடத்தினால், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் சிக்குவார்கள் என்கின்றனர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள்.

The post ஒன்றிய அரசுக்கு சொந்தமான கலாஷேத்ரா நிலத்தை போலி ஆவணம் மூலம் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி: மோசடியாக பவர் பதிவு செய்யப்பட்டதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: