கள்ளச்சாராயம் ஒழித்தல் குறித்த ஆய்வு கூட்டம்: அலுவலர்களுக்கு அறிவுரை

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பனையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் வாகன சோதனையின்போது கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டுவரும் நபர்கள் மட்டுமல்லாமல், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சந்து கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் அது எந்த கடையில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டதோ, அந்தக் கடையின் விற்பனையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பென்னாலூர் பேட்டை, நகரி – சித்தூர் போன்ற பை-பாஸ் சாலைகளில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனையாவதை டாஸ்மாக் மண்டல மேலாளர் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது கடைகளில் போதை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் கடையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், உதவி ஆணையர் (கலால்) கணேசன், ஆவடி உதவி ஆணையர் (மதுவிலக்கு பிரிவு) பொன் சங்கர், திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி லட்சுமி பிரியா, மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் (மேற்கு) முத்துராமன், (கிழக்கு) ரேணுகா, வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), கண்ணன் (பொன்னேரி) மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், கிழக்கு, மேற்கு மண்டல மேலாளர், டாஸ்மாக் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கள்ளச்சாராயம் ஒழித்தல் குறித்த ஆய்வு கூட்டம்: அலுவலர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: