ஏற்காடு : ஏற்காடு அருகே 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே கரடியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். 10ம் வகுப்பு செல்லும்போது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிட செல்வதாக கூறி சிறுமியை அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு, ராமர்(38) என்பவருக்கு சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து சிறுமியை ராமர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, சிறுமிக்கு பாலியல் ரீதியாக ராமர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ளாத சிறுமி, தனது தாய்மாமா சந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அவர் சிறுமியை மீட்டு வந்தார். தொடர்ந்து ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி புகாரளித்தார்.
அதில், தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த பாட்டி, அத்தை மீதும், திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த ராமர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில், 4 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஏற்காடு அருகே 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் appeared first on Dinakaran.
