டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும்: கே.சி.பழனிசாமி பேட்டி

கோவை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பியும், வழக்கு தொடர்ந்தவருமான கே.சி.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் 50 எம்பிக்களையும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் இருந்த அதிமுக ஒப்படைக்கப்பட்டது. தற்போது மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை பூஜ்யம். ராஜ்யசபாவில் மட்டுமே 4 உறுப்பினர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

எதிர்க்கட்சி அரசியலைகூட அவர் சரியாக செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், திமுகவை வீழ்த்தும் வலிமை அதிமுகவிற்கு இல்லை. அதிமுகவின் அனைத்து மட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி உள்ளது. அதற்கு செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதே சாட்சி. கட்சி தலைமையை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி காட்டும் ஆர்வத்தை, கட்சியை வலிமைப்படுத்துவதில் காட்டுவதில்லை. அதிமுக தலைமை மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது. டெல்லி கழுகுகள் எடப்பாடி பழனிசாமியை சுற்றி வட்டமிடுகின்றன. அதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி சுயநலமாக நடப்பது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவில் தலைமை மாற்றம் ஏற்படும். கொஞ்ச காலத்திற்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். அதிமுக மீண்டும் ஒன்றுபடுத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும்: கே.சி.பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: