பண்டிகை சீசன் இல்லாததால் ஜவுளிச்சந்தையில் விற்பனை மந்தம்

 

ஈரோடு, பிப். 12: பண்டிகை சீசன் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமாக நடந்தது. ஈரோடு ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் போன்ற பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை வரை நடைபெறும்.

இந்த சந்தையில் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். கடந்த 3 வாரமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. ஆனால், மூகூர்த்த தினங்கள் இருந்ததால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் ஓரளவுக்கு வந்து ஜவுளிகளை வாங்கி சென்றதால் சில்லரை விற்பனை ஓரளவுக்கு நடந்து வந்தது.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவடைந்ததால் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள் என ஜவளி சந்தை வியாபாரிகள் வேட்டி, சர்ட், துண்டு, லுங்கி, சுடிதார் ரகங்கள், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள், உள்ளாடைகளை விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். இருப்பினும் கேரளா, ஆந்திராவை சேர்ந்த சில வியாபாரிகள் மட்டுமே வந்ததாலும், பண்டிகை சீசன் இல்லாததால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் வராததாலும் இந்த வாரம் கூடிய சந்தையில் விற்பனை மந்தமாகவே நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பண்டிகை சீசன் இல்லாததால் ஜவுளிச்சந்தையில் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: