தரணியெங்கும் கொண்டாடப்படும் தைப்பூசம்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைப் பூசத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று யோசித்துப் பார்த்தால் தை மாதம் உத்திராயண காலத்தில் முதல் மாதம். நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளின் 24 மணி நேரம் 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு மாதமும் இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். தை மாதம் என்பது விடிகின்ற காலை 6 மணி முதல் 8 மணி வரை உள்ள 2 மணி நேரத்தைக் குறிக்கும் என்பதால் தை மாதத்தை விடியல் நேரம் என்று ஆன்மிக ரீதியில் சொல்லுவார்கள். காலை ஆறு மணிக்குத்தானே சூரிய உதயம் ஆகும். சூரிய உதயம் பிறந்து விட்டால் விடிந்து விட்டது என்று அர்த்தம். வழி கிடைத்துவிட்டது என்று அர்த்தம். இதன் அடிப்படையில்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்ற சொற்றொடரே உருவானது.

அருளாளர்கள் பிறந்த மாதம்

தை மாதம் பலவகையில் சிறப்பு பெற்ற மாதம். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் தை மாதத்தில்தான் அவதரித்தார். ஆசாரியர்களில் கூரத்தாழ்வார், குருகைக் காவலப்பன், சொட்டை நம்பி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், இவர்களெல்லாம் தை மாதத்தில் அவதரித்தவர்கள். நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார், தாயுமானவசுவாமிகள், அப்பூதி அடிகள், கலிக்காம நாயனார், கண்ணப்ப நாயனார், சண்டிகேஸ்வர நாயனார் அரிவாட்டாய நாயனார் முதலியவர்கள் தை மாதத்தில் அவதரித்தவர்கள். பூச நட்சத்திரம் கடக ராசியில் உள்ள சனியினுடைய நட்சத்திரம். கடக ராசி சந்திரன் ஆட்சி வீடு.

சனியின் மாதம்

சனிக்கு ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மகரம். இன்னொன்று கும்பம். மகரம் என்பது வினைகளை, காரியங்களைக் குறிக்கிறது. அதனால் அதற்கு கர்மஸ்தானம் என்று பெயர். அதே சனி அதற்கான பலனையும் கொடுப்பார் என்பதால் அதற்கு அடுத்த பாவத்தை லாப பாவம் என்று சொல்வார்கள். பத்தாம் இடத்தில் என்ன விதைக் கிறோமோ, அது பதினொன்றாம் இடத்தில் அறுவடையாகும். நல்ல கர்மாவை செய்வதன் மூலமாக நன்மை அடையலாம் என்பதைச் சொல்பவர் சனி.

உங்கள் செயல்தான்

உங்கள் பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கிறது. உங்கள் செயலை நீங்கள் தொடங்குகின்ற நேரம் காலை நேரம் அல்லவா. அந்த காலை நேரத்தில் நீங்கள் எந்த செயலைத் தொடங்குகிறீர்களோ, (10ம் பாவம்) அதற்கான விளைவு, அதற்கு அடுத்த பாவமாகிய லாப பாவத்தில் (11ம் பாவத்தில்) சனி தந்து விடுவார். எனவே இரண்டு வீடுகளும் அவருக்கு உரியதாக இருக்கிறது. அந்த லாப பாபத்துக்கு (11), 12 ஆவது பாவம் கர்ம பாவமாக (10ம் பாவம்) அமைவதால், உங்கள் புண்ணியங்களின் விளைவுகளையும் (அறுவடை) நீங்கள் பத்தாம் பாவமாகிய மகர மாதத்தில் செலவு செய்யப்போகிறீர்கள் (reflection to your action) என்று பொருள். அந்தச் செலவை நீங்கள் எப்படி செய்கிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி அதற்கு அடுத்த பாவத்தில் லாபம் கிடைக்கும் என்கிற அற்புதமான உண்மையைச் சொல்லுவது இந்த மகர மாதம் (தை மாதம்).

முருகனுக்கு ஏன் சிறப்பு?

இன்னொரு நுட்பத்தையும் நாம் இங்கு கவனிக்கலாம் தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப் பெரு மானைக் காட்டும் கிரகக் குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க் கையைக் குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளையும் பூசத்தில் முருகப்பெருமானையும் வணங்கி, எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர். எட்டு என்பது துன்பத்தைக் குறிப்பதால் அந்தத் துன்பத்தையும் முருகப் பெருமான் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள்ளுகின்றனர். சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும் போது (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டம சனி) அதே சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.

அறுபடை வீடுகள்

ஆனாலும், முருகனுக்கு மிக மிக விசேஷமான தலங்களாகச் சொல்லப் படுவது ஆறுபடை வீடுகள். ஆறுபடை வீடுகள் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை. ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறுபடை வீடுகள் என்பது குறித்து முதல் முதலில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் வருகிறது. அதில் ஆறுபடை என்று வரவில்லை ஆற்றுப்படை என்று வருகின்றது. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். ‘‘முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. சமய தத்துவங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதற்காகவே ஏற்பட்டன. ஆறு என்றால் வழி என்று பொருள். ஒருவன் வாழ்வில் உயர்வும் உன்னதமும் பெற உய்வும் பெற என்ன வழி என்பதைக் காட்டுவது தான் ஆறுபடை வீடுகள்.ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

சடாட்சர மந்திரம்

முருகப் பெருமானின் மந்திரம் “சடாட்சர மந்திரம்” .ஆறு எழுத்துக்களை உடைய மந்திரம் “சரவணபவ” எனும் மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சூட்சும தத்துவத்தைக் குறிக்கிறது சரவணபவ மந்திரத்தின் விளக்கத்தை வள்ளலார் அருளியிருக்கிறார். ச – என்பது உண்மை; ர – என்பது விஷய நீக்கம். வ – என்பது நித்ய திருப்தி; ண – என்பது நிர்விஷயம்; ப – என்பது பாவ நீக்கம்; வ – என்பது ஆன்ம இயற்கை குணம். இதை இன்னும் பல விதமாகவும் சொல்லுவார்கள். யோக சாஸ்திர அடிப்படையிலும் சொல்லுவார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு படை வீடு உண்டு. ஆறு எழுத்துக்கும் ஆறுபடை வீடு. முருகனுக்கு உரிய விரதம் சஷ்டி விரதம் அது ஆறாவது திதி. எண் கணித சாஸ்திரத்தில் ஆறு என்கிற எண் சுக்கிரனைக் குறிக்கிறது. சுக்கிரன் செல்வத்தைக் குறிக்கக்கூடிய கிரகம். இகத்திலும் பரத்திலும் ஒருவனுக்குத் தேவையான எல்லா ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய, சுக்கிரனின் ஆதிக்கம் உடைய, ஆறு என்கின்ற எண்ணின் தத்துவமாக விளங்குபவர் முருகப்பெருமான்.

பூசத்தில் முருகனை வணங்க வினை அறுபடும்

ஆற்றுப்படை வீடுகளை அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். ஏற்கனவே தை மாதம் என்பது வினைகளையும், வினைகளால் ஏற்படுகின்ற விளைவுகளையும் குறிக்கக்கூடிய மாதம் என்ற தத்துவத்தைப் பார்த்தோம். பூச நட்சத்திரம் என்பது மனத்தைத் தூண்டும் ராசியான கடகராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரம் என்பதையும் பார்த்தோம். இந்த வினையும் விளைவுகளும் என்பது சக்கரத்தைப் போல் சுழன்று கொண்டே இருக்கும். இந்த கர்ம வினையின் சுழற்சியை விலக்கினால்தான் கதி மோட்சம் கிடைக்கும். கர்ம வினையின் சுழற்சியை அறுக்கின்ற வீடுகள் இந்த படை வீடுகள் என்பதால் அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். கூரான ஞானவேல் கொண்டு நிற்கும் முருகப் பெருமானை, தைப்பூசம் அன்று அறுபடை வீடுகளிலும் வணங்குவதன் மூலமாக தீவினைகளை அடியோடு அறுத்துக் கொள்ளலாம்.

பழனியில் தை பூசம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு திருவாவினன்குடி, சக்திகிரி என்று பெயர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் ஒரு மலைக் கோயிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோயிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் வள்ளி தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறும்.

காவடிச் சிந்து தந்த முருகன்

இசை வடிவங்களில் புகழ் பெற்ற எளிய மக்களால் பாடக்கூடிய வடிவம் காவடிச்சிந்து. தைப்பூசத்தன்று பக்தர்கள் பல பகுதிகளிலிருந்தும் பாதயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக விரதமிருந்து முருகனுக்குக் காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது. சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப் படுத்தினார்.

காவடி வகைகள்

கண்ணுக்கும், காதுக்கும், நெஞ்சுக்கும் பக்தி உருக்கத்தைத் தரும் தைப் பூசம் அன்று முருகப் பெருமானுக்கு எண்ணற்ற பக்தர்கள் காவடி எடுக் கிறார்கள் அந்த காவடியிலேயே எத்தனை எத்தனை
வகைகள்?
1. அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
2. சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
3. தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
4. பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
5. பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
6. மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
7. மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.. இது தவிர சர்ப காவடியில் உண்டு.நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் காவடி எடுத்துக் கொண்டு முருகனின் பாடல்களைக் பாடிக் கொண்டு, அற்புதமான நாதஸ்வர இசையோடு வருவது மனதை உருக்கும். அதுதான் தைப்பூசம்.

பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பூசம்

எல்லாச் சிவத்தலங்களிலும் தைப் பூசம் கொண்டாடப்பட்டாலும் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர்தான். இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
“வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடை
மருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே’’
விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் என்பது தேவாரம்.

வள்ளலாரும் தைப்பூசமும்

தைப்பூசம் என்றாலே அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது வள்ளலார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார். “அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி” என்று பாடிய வள்ளலார்.இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன. சிறு வள்ளலார் கோவில்கள் இயங்குகின்றன. அத்தனைக் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அன்னதானம்
நடத்தப்படும்.

The post தரணியெங்கும் கொண்டாடப்படும் தைப்பூசம் appeared first on Dinakaran.

Related Stories: