பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை சோதனையில் சிக்கியது

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய 6.9 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த கடத்தல் பயணி கைது செய்யப்பட்டார். சுங்கத்துறை மோப்ப நாய், பயணியின் உடைமையை மோப்பம் பிடித்து, போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்தது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்த தனியார் பயணிகள் விமானத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து அவருடைய உடைமைகளை, மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தியதில், அவரது உடமைகளில் 3 பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட, உயர்ரக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

கஞ்சா மொத்தம் 6.9 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி. உடனடியாக சுங்க அதிகாரிகள் கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், இவரை இந்த கடத்தலுக்காக தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்த ஆசாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, கஞ்சாவை வாங்கிக் கொண்டு, இவருக்கு கடத்தல் வேலைக்காக கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுவதாக கூறியிருந்தார். ஆனால் பயணி சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டார் என்று தெரிந்ததும், அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். எனவே அவரை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

The post பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை சோதனையில் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: