சினிமா பாணியில் இளைஞர் கடத்தல்

தியாகதுருகம், ஜன. 19: தியாகதுருகம் அருகே சினிமா பாணியில் கடத்தப்பட்ட இளைஞரை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சின்ன மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வேல்முருகன் (20). இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சித்தலூரில் உள்ள இவரது அக்கா சரிதா என்பவரது வீட்டுக்கு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து சித்தலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ், மணி, ராமு ஹரிஷ், அன்பு, சுரேஷ், பாவாடை ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினார்களாம். அப்போது வேல்முருகனுடன் வந்த அவர்களது நண்பர்கள் அனைவரும் பயந்து ஓடிவிட்டனர். இதில் தனியாக மாட்டிக் கொண்ட வேல்முருகனின் செல்போனை பிடுங்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வேல்முருகனை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு 5 மணி நேரத்துக்கு மேலாக சுற்றிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. பின்னர் வேல்முருகனின் நண்பர்கள், ஊர் பொதுமக்களிடம் சென்று நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து உடனடியாக தியாகதுருகம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

நீண்ட நேரமாகியும் வேல்முருகன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த போலீசார் வேல்முருகனின் கைபேசி எண்ணை வைத்து தொடர்பு கொண்டனர். அப்போது அந்த எண் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. நீண்ட நேரம் ஆகிய பின்னர் வேல்முருகனை போலீசார் தேடுவதாக வேல்முருகனை கடத்தி சென்ற ரமேஷ் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு தெரியவந்தது. இதனால் பயந்து போன அவர்கள் வேல்முருகனை விளக்கூர் ஏரிக்கரை அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து வேல்முருகன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேல்முருகனை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சித்தலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (25), முத்துசாமி (28), ராமு (34), அன்பு (18) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிந்து ரமேஷ், முத்துசாமி மற்றும் ராமு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஏற்கனவே முத்துசாமி மற்றும் ராமு ஆகிய இருவர் மீது வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமா பட பாணியில் இளைஞரை வாகனத்தில் கடத்திய சம்பவம் 2 ஊர்களுக்கும் இடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சினிமா பாணியில் இளைஞர் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: