மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்ட எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

பெட்ரோபோல்: மேற்குவங்கத்தில் அமைதியை கொண்டு வர எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். இந்தியா – வங்கதேச பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக பெட்ரோபோல் தரைவழி துறைமுகத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இருநாடுகளும் ஒப்பு கொண்ட பாதையில் மைத்ரி துவார் என்ற புதிய சரக்கு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பயணிகள் முனையம் மற்றும் சரக்கு வாயிலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, “பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட தரைவழி துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லைக்கு அப்பால் செல்ல சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாதபோதே சட்டவிரோத நடமாட்டம் நடக்கிறது. இதனால் நாட்டின் அமைதி பாதிக்கப்படுகிறது. எல்லை தாண்டிய ஊடுருவலை தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை கொண்டு வர முடியும். இருநாடுகளிடையே வர்த்தக உறவுகள், இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த தரைவழி துறைமுகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன” என தெரிவித்தார்.

* மம்தாவின் ஊழல் அரசு
தொடர்ந்து பேசிய அமித் ஷா, “ஊழல் நிறைந்த திரிணாமுல் ஆட்சியில் மேற்குவங்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தேஷ்காலியில் பெண்கள் மீதான தாக்குதல், கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பலாத்கார கொலை சம்பவங்கள் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை காட்டுகிறது. 2026 மேற்குவங்க பேரவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர மக்கள் ஒன்றுபட வேண்டும். 2026 தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுவது தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்ட எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: