டாணா புயல் எதிரொலி; ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை: அம்மாநில முதல்வர்!

புவனேஸ்வர்: டாணா புயல் காரணமாக ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என அம்மாநில முதல்வர் மோகன் சரண் அறிவித்துள்ளார். அனைவரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்டது. டானா புயல், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை இன்று காலை அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பேட்டி அளித்த அம்மாநில முதலமைச்சர் கூறியதாவது; ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அனைவரின் ஒத்துழைப்பாலும், அரசு மனித உயிர்களை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கேந்திரபாரா, பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டம் உட்பட அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும். மேலும், சாலைகளில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்திருப்பதும் கூட இன்று பிற்பகலுக்குள் அகற்றப்படும் என்றும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

 

The post டாணா புயல் எதிரொலி; ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை: அம்மாநில முதல்வர்! appeared first on Dinakaran.

Related Stories: