உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவ. 1 1-ம் தேதி பதவியேற்க உள்ளார். சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் 2025 மே 13ம் தேதி நிறைவடையும். எந்தவொரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1960 மே 14ம் தேதி டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்ணாவின் தந்தை தேவ் ராஜ் கண்ணா 1985ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். டெல்லி சட்டப்பல்கலை கழகத்தில் சட்டம் பயின்ற சஞ்சீவ் கண்ணா, 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக பணியாற்றினார். 2005 ஜூன் 25ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019 ஜனவரி 18ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

The post உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: