தீபாவளி பண்டிகை முன்னிட்டு செஞ்சி ஆட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

விழுப்புரம்: தீபாவளி பண்டிகை வரும் வியாழக்கிழமை 31ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், செஞ்சி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை காட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில தினங்களே இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், ஜவுளி கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆட்டுச் சந்தைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் ஆடுகளை தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்வர். வழக்கம் போல், செஞ்சியில் நடைபெற்ற வார ஆட்டுச் சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

இந்த சந்தையில், வெள்ளாடுகள் ஜோடி ரூ.15,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி ரூ.25,000 முதல் ரூ.40000 ஆயிரம் வரையிலும், குறும்பாடுகள் ஜோடி ரூ.30,000 முதல் ரூ.50,000 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆட்டுச் சந்தை இன்று அதிகாலை 3 மணியளவில் துவங்கிய நிலையில், ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டுச் சந்தை தொடங்கிய சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post தீபாவளி பண்டிகை முன்னிட்டு செஞ்சி ஆட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை! appeared first on Dinakaran.

Related Stories: