ஆதிச்சநல்லூரில் சோகம் தாய், மகன் தூக்கிட்டு சாவு

ஸ்ரீவைகுண்டம் : ஆதிச்சநல்லூரில் தாய், மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முத்தம்மாள்(65). இவர்களது மகன் சின்னத்துரை (30), கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வந்தார்.

ஓய்வு பெற்ற தலையாரியான சண்முகம், சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், முத்தம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் முத்தம்மாள் வீடு, நேற்று நீண்ட நேரமாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், மதியம் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தாயும், மகனும் ஒரே அறையில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்தார். கடன் தொல்லையால் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆதிச்சநல்லூரில் சோகம் தாய், மகன் தூக்கிட்டு சாவு appeared first on Dinakaran.

Related Stories: