போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ருசிகரம் ‘சேட்டா… தீப்பெட்டி உண்டோ…’

*இது கேரள பள்ளி மாணவர்கள் சேட்டை

மூணாறு : மூணாறு அருகே போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா சிகரெட் பிடிக்க சேட்டா… தீப்பெட்டி உண்டோ என்று கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியிலிருந்து 40 பேர் கொண்ட மாணவர்கள் குழு ஆசிரியர்களுடன் இரண்டு பஸ்களில் நேற்று முன்தினம் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். மூணாறு அருகே அடிமாலியில் உணவு அருந்த பஸ்களை நிறுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் இருந்த மாணவர்கள் சிலர் அருகில் இருப்பது போதை தடுப்பு பிரிவு அலுவலகம் என்று தெரியாமல் அந்தக் கட்டிடத்தின் பின்பக்கமாக உள்ளே சென்று, அறைக்குள் இருந்த சிலரிடம், ‘சேட்டா…. தீப்பெட்டி உண்டோ’ என்று கேட்டுள்ளனர். சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து சீருடையில் வெளியே வந்த போதை தடுப்பு பிரிவு போலீசாரை கண்டதும் மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதில் 2 மாணவர்கள் போலீசாரிடம் சிக்கினர். பள்ளி மாணவர்கள் என்று தெரிந்து கொண்ட போலீசார், ‘‘தீப்பெட்டி உங்களுக்கு எதற்கு’’ என்று கேட்டபோது, பயத்தில் திருதிருவென முழித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் ராகேஷ், சிறுவர்களை சோதனையிட்டபோது 5 கிராம் கஞ்சாவும், மற்றொரு சிறுவனிடமிருந்து ஒரு கிராம் கஞ்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ருசிகரம் ‘சேட்டா… தீப்பெட்டி உண்டோ…’ appeared first on Dinakaran.

Related Stories: