கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் சாலையோர கடைகள் அகற்றம்

வால்பாறை : வால்பாறை-பொள்ளாச்சி சாலையில், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் இருந்து வாட்டர்பால்ஸ் எஸ்டேட் வரை பல இடங்களில் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, கடை அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இது குறித்து பல தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையினர், கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று ஐயர்பாடி முதல் கவர்கல் வரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில் இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடரும் என நெடுஞ்சாலை துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. வாட்டர்பால்ஸ், வால்பாறை டவுன், சோலையார் அணை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து, தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூடத்தில், சார் ஆட்சியர் நகராட்சியிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறினர். அப்போது, நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அலுவலர்கள் நடைபாதை உள்ள இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தம் எனவும், நகராட்சிக்கு பாத்தியபட்டது இல்லை என பதில் தெரிவித்தனர்.

நடைபாதையின் நிலையை தெரிந்து கொண்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடைபாதையை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனவே நடைபாதையை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். நடைபாதையை வழிமறித்து கடை வைக்க நகராட்சி லைசென்ஸ் உள்ளதாக சிலர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலை தொடர்வதால் நடைமேடை இடிக்கப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நடைபாதையில், பாதையை வழிமறித்து கடை வைக்க லைசென்ஸ் கொடுத்த நகராட்சி அதிகாரிகள் மீதும், பின்புலமாக உள்ளவர்கள் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் சாலையோர கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: