வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 263 தொழில் முனைவோர் பயன்

 

சிவகங்கை, அக்.23: சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனிநபர் தொழில் முனைவுகள், குழு தொழில் முனைவுகள் உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றை கிராம பகுதிகளில் உருவாக்குதலும், மேம்படுத்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த தனிநபர், தொழில் குழுக்கள் மேம்பாட்டின் மூலம் வளத்தையும், அதன் நீடித்த நிலைத்த தன்மையையும் உருவாக்கி, ஊரகப் பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்துதல், ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதிச் சேவைகளுக்கு வழிவகை செய்தல், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற நோக்கங்களை கொண்ட ஒரு சிறப்பு முன்னோடித் திட்டமாக திகழ்கிறது.

இத்திட்டத்தின் கீழ் மதி சிறகுகள் தொழில் மையம் ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை மற்றும் வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்கிடும் மையமும் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறந்து வைக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.

காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகளிலும் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தல் 42 ஊராட்சிகளிலும் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், இணை மானிய திட்டத்தின் கீழ் காளையார்கோவில், தேவகோட்டை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களிலுள்ள 124 ஊராட்சிகளில் 263 தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டு, அதில் மானியமாக ரூ.2.93 கோடி வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.

The post வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 263 தொழில் முனைவோர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: