கருங்குழி ரயில்நிலையம் அருகில் சேறும் சகதியுமாக மாறிய தற்காலிக சாலை: அரசு பேருந்துகள் நிறுத்தம்

மதுராந்தகம்: கருங்குழி ரயில்நிலையம் அருகில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக, அதன் அருகில் அமைத்திருந்த தற்காலிக சாலை, தற்போதைய மழையில் பலத்த சேதடைந்து சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதையடுத்து அவ்வழியே அரசு பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கருங்குழி ரயில்நிலையம் அருகே ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, தற்போது கினார் வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில், புதிதாக ₹32.22 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், அந்த நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்தில், புதிதாக தற்காலிக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு, அதில் வாகன போக்குவரத்து இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால், அந்த தற்காலிக சர்வீஸ் சாலை முற்றிலும் பழுதடைந்து சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியே திருக்கழுக்குன்றம், கே.கே.புதூருக்கு சென்று வந்த 2 அரசு பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தோட்டநாவல், கினார், கே.கே.புதூர், ஏறுப்பாக்கம், இருசமநல்லூர், கத்திரிசேரி, விழுதமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், சேறும் சகதியுமாக மாறிய அந்த தற்காலிக சர்வீஸ் சாலை வழியே வாகன ஓட்டிகளும் சென்று வருவதிலும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, புதிய மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்தில் சேறும் சகதியுமான சேதமான தற்காலிக சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைத்து, வாகன பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கருங்குழி ரயில்நிலையம் அருகில் சேறும் சகதியுமாக மாறிய தற்காலிக சாலை: அரசு பேருந்துகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: